Wednesday, April 7, 2010

உங்கள் பிள்ளைகளை கல்லூரிக்கு அனுப்ப தயாராகி விட்டீர்களா??



கொஞ்சம் கவனியுங்கள் !!! பாகம்-I


இந்த பதிவு தொடரில், வளர்ந்த பிள்ளைகளின் நிலைமை, பெற்றோர்களின் அறியாமை மற்றும் இன்ஜினியரிங் மோகம் பற்றி, இரண்டு அல்லது மூன்று பாகங்களாக எழுத முயற்சி செய்யப்போகிறேன். உங்களுடைய மேலான கருத்துக்களை பதிவு செய்தால் அடுத்த பாகங்களில் அதையும் சேர்த்து கொள்ள முயற்சிக்கிறேன்.

10 ஆவது, 12 ஆவது வகுப்பு படிக்கும் பிள்ளைகள் இருக்கும் பெற்றோர்களுக்கு, அடுத்து அவர்களை என்ன படிக்க வைக்கிறது, எந்த கல்லூரியில் சேர்ப்பது? உள்ளூரிலா, வெளியூரிலா, வெளி நாட்டிலா? எந்த பாடத்திற்கெல்லாம் ட்யூஷனுக்கு அனுப்ப வேண்டும்? பொறியியல், மருத்துவம், IITJEE , SAT கோச்சிங் சென்டர் எங்க இருக்கு? பக்கத்துக்கு வீட்டு பையன் என்ன படிக்க போறான்? நண்பர் பொண்ணு எந்த காலேஜ்ல படிக்கிறா..?? அதற்கு எவ்வளவு பணம் செலவாகும்? என்று தகவல் சேகரிக்க தொடங்கி விடுவார்கள். எந்த சப்ஜெக்ட் படிச்சா உடனே வேலை கிடைக்கும் ?? இதுக்கு மேல பல வீடுகளில்... நம்ம புள்ளைங்க என்னத்த படிச்சு கிழிக்க போறாங்களோ?? எத்தன மார்க் கிடைக்குமோ..?? நமக்கு நல்ல பேரு வங்கி தருவாங்களோ?? ( இவங்க நல்ல படிச்சாங்களோ இல்லையோ இவங்க பிள்ளைகள் கட்டாயம் படிச்சாகணும்.. இல்லைண்ணா வீட்டுல ரண களம் தான்......).

சில வீடுகள்ல இந்த சமயத்தில் தான் தெய்வ பக்தி ததும்பி வழியும். கோவிலுக்கு அடிக்கடி போறது, தினமும் காலை மாலை மறக்காம பூஜை பண்ணறது, பிள்ளையாரோட பேரம் பேசறது, விரதம், வேண்டுதல்கள்.. அப்பப்பா!!. அப்பாக்கள் எல்லாம் ரொம்ப கண்டிக்க தொடங்கிவிடுவாங்க. வீட்டுக்குள்ள நுழையும் போதெல்லாம் பிள்ளைகள் புத்தகமும் கையுமாக இருக்கணும். . ( தந்தை குலங்கள் குடி, சிகிரெட்டு, ஊர்சுத்துதல், வேண்டாத டிவி நிகழ்ச்சிகள் மற்றும் பலவற்றில் ஈடுபட்டு இருப்பார்கள்). மாட்டை அடிப்பது போல் அடித்து படிக்க வைக்கும்/புத்தி சொல்லும் தந்தைகளை பார்த்ததுண்டு (இது நம் தமிழகத்தின் சிறப்பு அம்சம்) . சிலர், விதிவிலக்காக நல்ல புரிதலுடன் இருக்கிறார்கள்.

தாய்குலங்கள், பாசத்துடன் பிள்ளைகளுக்கு பிடித்ததை எல்லாம் சமைத்து போடுவாங்க.. வாயில ஊட்டி வேற விடுவாங்க.. ஏன்னா அப்ப கூட, படிக்கிற நேரம் வீணாக போய் விடக் கூடாதாம். சிலரோ, நேர் எதிர். கண்ணில் படும் போதெல்லாம் பிள்ளைகளை படிக்குமாறு திட்டி கொண்டே இருப்பார்கள். இப்படி பாடாய் படுத்தியதால் எனக்கு தெரிந்த ஒரு பையன் தூங்கி கொண்டிருக்கும் போது, யாரவது தட்டினால் கூட உடனே தலையணையை எடுத்து மடியில் வைத்து படிக்க தொடங்கிவிடுவான். அந்தோ பரிதாபம். இதுல புருஷன் பொண்டாட்டிக்குள்ள கருத்து வேறுபாடு வேற !! மொத்தத்தில் ஒரே குழப்பம்... வீட்டில் சண்டை சச்சரவுகள். இது தேவையா???

பெற்றோர்கள் எல்லோரையும் ஓன்று திரட்டி ஒரு மீட்டிங் வச்சு... உங்கள் பிள்ளைகளை பொறியியல் கல்லூரியில் சேர்க்க விருப்பம் உள்ளவுங்க கை தூக்குங்கன்னு சொன்னா.. எல்லா கையும் உயரும். ஏன்னு கேட்டா.. படிச்சு முடிச்ச உடனே ஏதாவது ஒரு வேலை கிடைச்சுடும்னு சொல்வாங்க.. இப்ப எல்லாம் நிறைய சுய நிதி கல்லூரிகள் (self financing colleges) இருப்பதால் பாசானா போதும் பணம் கொடுத்தாவது சீட் வாங்கி விடலாம் என்பது அவர்கள் எண்ணம்.

அடுத்தது மருத்துவம். அதற்கு சில கைகள் மட்டும் தான் உயரும் .. ஏனென்றால், அது அறிவு ஜீவிகளுக்கு உள்ள படிப்புன்னு எல்லோருக்கும் ஒரு நம்பிக்கை தான்.. நிறைய செலவழித்து படித்தும், மேல் படிப்பு இல்லாமல் பெரிதாக மருத்துவத்தில் முன்னேறி வர முடியாது, நிறைய உடனே சம்பாதிக்க முடியாது என்ற எண்ணங்கள் கூட பலருக்கு உண்டு.

மற்ற பட்ட படிப்புகளுக்கு B.A , B.Sc, B.Com. etc.. யாருமே கை தூக்க மாட்டாங்க. அதெல்லாம் படிச்சா எங்க வேலை கிடைக்கும்... அலைந்து திரிய வேண்டும் என்பது அவர்கள் கணிப்பு. எவ்வளவு தெளிவா யோசிக்கிறாங்க பாருங்க.

இப்படியாக, தங்களுடைய பிள்ளைகள் என்ன கோர்ஸ் படிக்கணுமுன்னு தீர்மானிப்பது பெற்றோர்களே . பிள்ளைகளுக்கு தான் என்ன படிக்க வேண்டும் என்று தீர்மானிக்க நமது நாட்டில், பல வீடுகளில் உரிமை இல்லை. பிள்ளைகள் வெறும் கைப்பாவைகளாகவே நடத்தப்படுகிறார்கள்.

பெற்றோர்களின் எதிர்பார்ப்புக்கு இணங்க இவர்கள் ஆட வேண்டும். ஆடினால் ஏதாவது incentive கொடுப்பார்கள் அதில் முக்கிய பங்கு வகிப்பது கம்ப்யூட்டர் கேம்ஸ். இது குழந்தைகளை இன்னும் கெடுக்கிறது என்று அவர்களுக்கு புரிவதில்லை. எல்லா தரப்பட்ட மாணவர்களாலும் இது போன்ற பெற்றோர்களின் திணிப்பை தாங்கிக்கொள்ள முடியுமா என்றால்..... நிச்சயமாக முடியாது.

பெற்றோர்களே... உங்களின் தலையீடு, உடுத்தும் துணியிலிருந்து, உண்ணும் உணவு, தலை முடி வெட்டுவது, என்ன TV ப்ரோக்ராம் பார்ப்பது, யார் யார் நண்பர்கள், எப்போ எழுவது, எப்போ கழிப்பறை உபயோகிப்பது வரை போய் விடுகிறது. இது உங்களுக்கே அராஜகமாக தெரியவில்லை. இது தொடர்ந்து அவர்களது திருமண வாழ்கை வரை சென்று... அவனை /அவளை நிலைகுலைய செய்து விடுவார்கள். நீங்கள் ஒரு குரங்காட்டியாகவே மாறி விடுகிறீர்கள். இப்போது தெரிகிறதா பிள்ளைகள் ஏன் தன் சொந்தக்காலில் நிற்க தொடங்கிய உடன் உங்களை கண்டு கொள்வதில்லை என்று?? போதுண்டா சாமின்னு சொல்லிட்டு தலைமறைவாகி விடுவார்கள்.

நிறைய பெற்றோர்களுக்கு சொல்லப்பட்டிருப்பவை புரிவதில்லை. புரிந்து கொள்ளவும் முயற்சிப்பதில்லை. யாரு என்ன சொன்னா என்ன?? என் பையன் / பொண்ணு இப்படித்தான் இருக்கணும்/படிக்கணும் அப்படின்னு கோடு போட்டு வளர்க்கிறாங்க. போன்சாய் (Bonsai) மரங்களை போல.. கிளைகளை ஒடித்து, வேரை சுருட்டி, தண்டுகளை வளைத்து.. அவர்களின் மனங்களை முடமாக்கி.. ஆசைகளை அடக்கி........ என்னத்த சொல்ல? எல்லா பிள்ளைகளையும் ஒரே அச்சில் வார்த்த பொம்மைகள் போல் செய்ய முயற்ச்சிக்கின்றனர்.

ஒவ்வொரு பிள்ளைக்கும் மூளை செயல்படும் அளவு வித்யாசப்படும். அவர்கள் எண்ணங்கள், செயல்பாடுகள் எல்லாமே வித்யாசமாக இருக்கும். ஒவ்வொரு பிள்ளையும் தனித்தன்மையுடன் இருக்கும். அவர்களுக்கு விருப்பம் உள்ள துறையில் அவர்கள் செல்ல அனுமதிக்க வேண்டும். விருப்பமில்லா துறையில் அவர்களை ஓரளவுக்கு தான் தள்ள முடியும். அளவுக்கு மீறி தள்ளினால் கீழே விழுந்திடுவாங்க. அப்புறம் அவர்களால் வாழ்க்கையில் எழும்பவே முடியாது.

பெற்றோர்களுக்கு, கால் போன போக்கிலே பிள்ளைகளை அனுப்பாமல் பார்த்து வளர்ப்பதற்கும், அவர்கள் ஆசைகளை, திறமைகளை புரிந்து கொண்டு வளர்ப்பதற்கும் வித்தியாசம் தெரிந்திருக்க வேண்டும்.

உலகம் மாறிவிட்டது.. நீங்கள் மட்டும் இன்னும் மாறாமல் ஏன் இருக்கிறீர்கள்? எல்லா துறைகளிலும் முன்னேற வழி இருக்கின்றன. ஒரு Engineer மட்டும் தான் வாழ்க்கையில் வெற்றி பெற முடியும் என்ற நிலை இல்லை.

இப்படி பொறியியல் மோகம் பிடுத்து தள்ளி விட்ட குழந்தைகளின் கதி என்ன...??
அடுத்த பாகத்தில் காணலாம்...

இந்த பதிவை எனக்காக எடிட் செய்தவர் - அன்புத்தோழி சித்ரா..

21 comments:

  1. ரொம்ப உபயோகமான டிப்ஸ் எல்லாமே..
    ரொம்பவும் போர்ஸ் பண்ணா பிள்ளைங்க.. எரிச்சல் படறது தான் மிச்சம்..

    நீங்க சொன்னா மாதிரி... வீட்டிலையும் மிஸ் அண்டர்ஷ்டண்டிங் தான் வரும்..

    சிந்திக்க வேண்டிய விஷயம்...பகிர்வுக்கு நன்றி..
    வாழ்த்துக்கள்..

    Waiting for the next part.... :D :D

    ReplyDelete
  2. தங்கை மைதிலி,
    அருமையான உபயோகமான பதிவு. இந்த தொடர்பதிவை அதிக இடைவெளி தராமல் உடனுக்குடன் எழுதினால், முடிவெடுக்க முடியாமல் அல்லது தெரியாமல் தடுமாறும் பெற்றோர்களுக்கு பெரும் உதவியாக இருக்கும்.

    ReplyDelete
  3. நல்ல விஷயம் குறித்த பதிவுதான்; சில கருத்துக்களோடு மட்டும், ஒரு சராசரி தாயாய் நான் முரண்படுகிறேன் என்றாலும், எல்லா பாகங்களையும் படித்துவிட்டு நீங்கள் சொல்லவருவதை முழுதாய் புரிந்துகொண்டபின் சந்தேகங்களை முன்வைப்பதே சரியாயிருக்கும் இல்லையா?

    அதிகம் காக்க வைக்காமல் தொடர்ந்து எழுதுங்கள். மே 3ந்தேதியிலிருந்து பொறியியல் கல்லூரி விண்ணப்பங்கள் விநியோக்க ஆரம்பிப்பார்களாம். அதற்குமுன் சிந்தித்து முடிவெடுக்க அவகாசம் வேண்டுமே!!

    ReplyDelete
  4. நல்லா அனுபவித்து எழுதியிருக்கின்றீர்கள். மருத்துவமும்,எஞ்சினியரும்தான் படிப்பா என்று கேட்டு நான் எழுதிய கமெண்ட் இல்லை.

    ReplyDelete
  5. நண்பர்கள் சித்ரா மற்றும் ஆனந்திக்கு எனது நன்றி.

    ReplyDelete
  6. அண்ணன் செல்வகுமார் மற்றும் ஹுஸைனம்மா அவர்களுக்கு, இதன் அடுத்த பகுதிகளை உங்களின் வேண்டுகோளின் படி உடன் எழுத முயற்ச்சிக்கிறேன். உங்கள் கருத்துக்களுக்குநன்றி.

    ReplyDelete
  7. உங்கள் வருகைக்கு நன்றி பித்தன்.. நீங்கள் கேட்க்க வில்லை என்றாலும் மருத்துவமும்,எஞ்சினியரும்தான் படிப்பு என்று சராசரி மக்கள் நினைக்கிறார்கள். நான் இங்கே எந்த படிப்பையும் பற்றி எழுதவரவில்லை. இன்ஜினியரிங் பற்றியும் அதன் குறை நிறைகளை பற்றியும் மட்டுமேஎழுதப்போகிறேன்.

    ReplyDelete
  8. மயிலம்மா ரொம்ப அருமையா இருக்குடா சொல்லாடல் கூட... உண்மை நீ சொன்னது அனைத்தும் ..இங்கே நிறையப் பெற்றோர் தங்கள் கனவ பிள்ளைகளுக்குத் திணிக்கிறார்கள்..குரங்காட்டின்னு சொன்னே பாரு உண்மைதான் ..சீக்கிரம் தொடரும்மா படிக்க ஆவலா இருக்கேன்

    ReplyDelete
  9. நாம் பிள்ளைகளை ஆரம்பத்திலிருந்தே படிப்பதை ஒரு பழக்கமாக கொண்டுவந்துவிட்டால் இப்படி பட்ட பிரச்சனைகள் வரத்து என்று நினைக்கிறன். இப்போது இருக்கும் காலகட்டகங்களில் தொழில்முறை கல்வி அதிலும் முதுகலை பட்டம் பெற்று இருந்தால் தான் முடிகிறது...
    அதற்க்காக பிள்ளைகளை வருத்தி எடுக்க வேண்டும் என்பதல்ல.. அவர்களின் நாட்டத்தை புரிந்து அதற்கேற்றார் போல் நடப்பது சிறப்பு.
    சில பிள்ளைகளுக்கு படிப்பின் வெறுப்பு வர காரணம் பரிட்சையின் போது உட்காரவைத்து வருது எடுப்பதனால், அதுவே தினமும், படிப்பதை பழக்கமாக கொண்டுவந்து விட்டால் கஷ்டம் இருக்காது. பிள்ளைகளின் பிரச்சனை என்ன என்பதை புரிந்து நடந்து கொள்வது பெட்ட்றோரின் கடமை.

    ReplyDelete
  10. நல்ல தொடர் மைதிலி தொடருங்கள்..!! தொடர்கிறோம்

    ReplyDelete
  11. தொடர்ந்து எழுதுங்கள்... ஏகப்பட்ட வாய்ப்புகள் இருந்தும் ஏன் இந்த இரண்டை மட்டும் தேர்ந்தெடுக்கிறார்கள் என்று புரியவில்லை..

    நன்றி..

    ReplyDelete
  12. நன்றி தேன் அக்கா.. நீங்க வந்து மயிலு.. அப்படின்னு சொன்னாதான் மனசு நிறையுது.

    ReplyDelete
  13. வசுமதி, உங்களை என் blogukku வரவேற்கிறேன். உங்கள் கருத்துக்கள் சரியானவையே. //பிள்ளைகளின் பிரச்சனை என்ன என்பதை புரிந்து நடந்து கொள்வது பெட்ட்றோரின் கடமை// இது நூறு சதவிகிதம் உண்மை.

    ReplyDelete
  14. வருக சுரேஷ்.. உங்கள் ஆதரவுக்கு நன்றி.

    ReplyDelete
  15. வருக பிரகாஷ்.. எனக்கும் என் இப்படி மக்கள் அலைகிறார்கள் என்று புரியவில்லை. எல்லாம் software companies இன் வரவு என்பது என் யூகம்.

    ReplyDelete
  16. நல்ல உபயோகமான பதிவு, மைதிலி...
    என் பிள்ளையும் engineering படிக்கிறான்/றாள், படித்து முடித்த உடன் பல்லாயிரக்கணக்கில் சம்பாதிக்க வேண்டும் என்ற வெறி எல்லாம் சேர்ந்துதான் இப்படி ஆட்டி வைக்கிறது. அதிலும், இப்போ சில வருஷங்களாக Computer Sceince க்குத்தான் அதிக வரவேற்பு, மாணவர்கள், பெற்றோர்கள் மத்தியில். போகப் போக இந்தியாவில், அதிலும் தமிழகத்தில் Basic Sciences, Languages and Arts ல் ஆட்களே இல்லை என்ற நிலைமை ஏற்பட்டு விடும் போல.

    அம்மு

    ReplyDelete
  17. தாய்குலங்கள், பாசத்துடன் பிள்ளைகளுக்கு பிடித்ததை எல்லாம் சமைத்து போடுவாங்க.

    absolutely.

    சிலர், விதிவிலக்காக நல்ல புரிதலுடன் இருக்கிறார்கள்.

    thank god for getting such parents.

    then the fightings and contraction in ideas is due to different wishes b/t parents and children. it would be better if children give up themselves completely to their parents.

    ReplyDelete
  18. //பெற்றோர்களுக்கு, கால் போன போக்கிலே பிள்ளைகளை அனுப்பாமல் பார்த்து வளர்ப்பதற்கும், அவர்கள் ஆசைகளை, திறமைகளை புரிந்து கொண்டு வளர்ப்பதற்கும் வித்தியாசம் தெரிந்திருக்க வேண்டும்.//

    இது ரொம்ப முக்கியம். அழகாய் சொல்லியிருக்கீங்க.

    ReplyDelete
  19. இவங்க நல்ல படிச்சாங்களோ இல்லையோ இவங்க பிள்ளைகள் கட்டாயம் படிச்சாகணும்.. இல்லைண்ணா வீட்டுல ரண களம் தான்......).

    100% கரெக்ட்டான வார்த்தைகள். பெருமைக்காக பிள்ளைகள் படிக்கணும் என்று நினைக்கிறார்கள்.பதிவு நல்லாயிருக்கு மைதிலி..

    ReplyDelete
  20. என் பெரிய மகன் b.com இந்த வருடம் முடித்து உடனேயே கேம்பஸ் மூலம் நல்ல கம்பெனியில் நல்ல சம்பளத்தில் பணியில் சேர்ந்து உள்ளான். ACS-ம் படித்து கொண்டு இருக்கிறான். அவன் ஃப்ரெண்ட்ஸ் எல்லோரும் இஞ்சினியரிங் படித்துக் கொண்டு உள்ளனர்.(சுமாராக) என் இரண்டாவது பையன் இப்பொழுது +2வில் முதல் க்ரூப்பில் 70% மார்க் வாங்கி உள்ளான். ஆனால், கேமராமேன் கோர்ஸ் படிக்கவே முதல் க்ரூப் எடுத்தான். ஆட்டு மந்தை கூட்டம் போல் பெற்றோர்கள் இப்பொழுது இருக்கிறார்கள்.

    ReplyDelete