கொஞ்சம் கவனியுங்கள் !!! பாகம்-I
இந்த பதிவு தொடரில், வளர்ந்த பிள்ளைகளின் நிலைமை, பெற்றோர்களின் அறியாமை மற்றும் இன்ஜினியரிங் மோகம் பற்றி, இரண்டு அல்லது மூன்று பாகங்களாக எழுத முயற்சி செய்யப்போகிறேன். உங்களுடைய மேலான கருத்துக்களை பதிவு செய்தால் அடுத்த பாகங்களில் அதையும் சேர்த்து கொள்ள முயற்சிக்கிறேன்.
10 ஆவது, 12 ஆவது வகுப்பு படிக்கும் பிள்ளைகள் இருக்கும் பெற்றோர்களுக்கு, அடுத்து அவர்களை என்ன படிக்க வைக்கிறது, எந்த கல்லூரியில் சேர்ப்பது? உள்ளூரிலா, வெளியூரிலா, வெளி நாட்டிலா? எந்த பாடத்திற்கெல்லாம் ட்யூஷனுக்கு அனுப்ப வேண்டும்? பொறியியல், மருத்துவம், IITJEE , SAT கோச்சிங் சென்டர் எங்க இருக்கு? பக்கத்துக்கு வீட்டு பையன் என்ன படிக்க போறான்? நண்பர் பொண்ணு எந்த காலேஜ்ல படிக்கிறா..?? அதற்கு எவ்வளவு பணம் செலவாகும்? என்று தகவல் சேகரிக்க தொடங்கி விடுவார்கள். எந்த சப்ஜெக்ட் படிச்சா உடனே வேலை கிடைக்கும் ?? இதுக்கு மேல பல வீடுகளில்... நம்ம புள்ளைங்க என்னத்த படிச்சு கிழிக்க போறாங்களோ?? எத்தன மார்க் கிடைக்குமோ..?? நமக்கு நல்ல பேரு வங்கி தருவாங்களோ?? ( இவங்க நல்ல படிச்சாங்களோ இல்லையோ இவங்க பிள்ளைகள் கட்டாயம் படிச்சாகணும்.. இல்லைண்ணா வீட்டுல ரண களம் தான்......).
சில வீடுகள்ல இந்த சமயத்தில் தான் தெய்வ பக்தி ததும்பி வழியும். கோவிலுக்கு அடிக்கடி போறது, தினமும் காலை மாலை மறக்காம பூஜை பண்ணறது, பிள்ளையாரோட பேரம் பேசறது, விரதம், வேண்டுதல்கள்.. அப்பப்பா!!. அப்பாக்கள் எல்லாம் ரொம்ப கண்டிக்க தொடங்கிவிடுவாங்க. வீட்டுக்குள்ள நுழையும் போதெல்லாம் பிள்ளைகள் புத்தகமும் கையுமாக இருக்கணும். . ( தந்தை குலங்கள் குடி, சிகிரெட்டு, ஊர்சுத்துதல், வேண்டாத டிவி நிகழ்ச்சிகள் மற்றும் பலவற்றில் ஈடுபட்டு இருப்பார்கள்). மாட்டை அடிப்பது போல் அடித்து படிக்க வைக்கும்/புத்தி சொல்லும் தந்தைகளை பார்த்ததுண்டு (இது நம் தமிழகத்தின் சிறப்பு அம்சம்) . சிலர், விதிவிலக்காக நல்ல புரிதலுடன் இருக்கிறார்கள்.
தாய்குலங்கள், பாசத்துடன் பிள்ளைகளுக்கு பிடித்ததை எல்லாம் சமைத்து போடுவாங்க.. வாயில ஊட்டி வேற விடுவாங்க.. ஏன்னா அப்ப கூட, படிக்கிற நேரம் வீணாக போய் விடக் கூடாதாம். சிலரோ, நேர் எதிர். கண்ணில் படும் போதெல்லாம் பிள்ளைகளை படிக்குமாறு திட்டி கொண்டே இருப்பார்கள். இப்படி பாடாய் படுத்தியதால் எனக்கு தெரிந்த ஒரு பையன் தூங்கி கொண்டிருக்கும் போது, யாரவது தட்டினால் கூட உடனே தலையணையை எடுத்து மடியில் வைத்து படிக்க தொடங்கிவிடுவான். அந்தோ பரிதாபம். இதுல புருஷன் பொண்டாட்டிக்குள்ள கருத்து வேறுபாடு வேற !! மொத்தத்தில் ஒரே குழப்பம்... வீட்டில் சண்டை சச்சரவுகள். இது தேவையா???
பெற்றோர்கள் எல்லோரையும் ஓன்று திரட்டி ஒரு மீட்டிங் வச்சு... உங்கள் பிள்ளைகளை பொறியியல் கல்லூரியில் சேர்க்க விருப்பம் உள்ளவுங்க கை தூக்குங்கன்னு சொன்னா.. எல்லா கையும் உயரும். ஏன்னு கேட்டா.. படிச்சு முடிச்ச உடனே ஏதாவது ஒரு வேலை கிடைச்சுடும்னு சொல்வாங்க.. இப்ப எல்லாம் நிறைய சுய நிதி கல்லூரிகள் (self financing colleges) இருப்பதால் பாசானா போதும் பணம் கொடுத்தாவது சீட் வாங்கி விடலாம் என்பது அவர்கள் எண்ணம்.
அடுத்தது மருத்துவம். அதற்கு சில கைகள் மட்டும் தான் உயரும் .. ஏனென்றால், அது அறிவு ஜீவிகளுக்கு உள்ள படிப்புன்னு எல்லோருக்கும் ஒரு நம்பிக்கை தான்.. நிறைய செலவழித்து படித்தும், மேல் படிப்பு இல்லாமல் பெரிதாக மருத்துவத்தில் முன்னேறி வர முடியாது, நிறைய உடனே சம்பாதிக்க முடியாது என்ற எண்ணங்கள் கூட பலருக்கு உண்டு.
மற்ற பட்ட படிப்புகளுக்கு B.A , B.Sc, B.Com. etc.. யாருமே கை தூக்க மாட்டாங்க. அதெல்லாம் படிச்சா எங்க வேலை கிடைக்கும்... அலைந்து திரிய வேண்டும் என்பது அவர்கள் கணிப்பு. எவ்வளவு தெளிவா யோசிக்கிறாங்க பாருங்க.
இப்படியாக, தங்களுடைய பிள்ளைகள் என்ன கோர்ஸ் படிக்கணுமுன்னு தீர்மானிப்பது பெற்றோர்களே . பிள்ளைகளுக்கு தான் என்ன படிக்க வேண்டும் என்று தீர்மானிக்க நமது நாட்டில், பல வீடுகளில் உரிமை இல்லை. பிள்ளைகள் வெறும் கைப்பாவைகளாகவே நடத்தப்படுகிறார்கள்.
பெற்றோர்களின் எதிர்பார்ப்புக்கு இணங்க இவர்கள் ஆட வேண்டும். ஆடினால் ஏதாவது incentive கொடுப்பார்கள் அதில் முக்கிய பங்கு வகிப்பது கம்ப்யூட்டர் கேம்ஸ். இது குழந்தைகளை இன்னும் கெடுக்கிறது என்று அவர்களுக்கு புரிவதில்லை. எல்லா தரப்பட்ட மாணவர்களாலும் இது போன்ற பெற்றோர்களின் திணிப்பை தாங்கிக்கொள்ள முடியுமா என்றால்..... நிச்சயமாக முடியாது.
பெற்றோர்களே... உங்களின் தலையீடு, உடுத்தும் துணியிலிருந்து, உண்ணும் உணவு, தலை முடி வெட்டுவது, என்ன TV ப்ரோக்ராம் பார்ப்பது, யார் யார் நண்பர்கள், எப்போ எழுவது, எப்போ கழிப்பறை உபயோகிப்பது வரை போய் விடுகிறது. இது உங்களுக்கே அராஜகமாக தெரியவில்லை. இது தொடர்ந்து அவர்களது திருமண வாழ்கை வரை சென்று... அவனை /அவளை நிலைகுலைய செய்து விடுவார்கள். நீங்கள் ஒரு குரங்காட்டியாகவே மாறி விடுகிறீர்கள். இப்போது தெரிகிறதா பிள்ளைகள் ஏன் தன் சொந்தக்காலில் நிற்க தொடங்கிய உடன் உங்களை கண்டு கொள்வதில்லை என்று?? போதுண்டா சாமின்னு சொல்லிட்டு தலைமறைவாகி விடுவார்கள்.
நிறைய பெற்றோர்களுக்கு சொல்லப்பட்டிருப்பவை புரிவதில்லை. புரிந்து கொள்ளவும் முயற்சிப்பதில்லை. யாரு என்ன சொன்னா என்ன?? என் பையன் / பொண்ணு இப்படித்தான் இருக்கணும்/படிக்கணும் அப்படின்னு கோடு போட்டு வளர்க்கிறாங்க. போன்சாய் (Bonsai) மரங்களை போல.. கிளைகளை ஒடித்து, வேரை சுருட்டி, தண்டுகளை வளைத்து.. அவர்களின் மனங்களை முடமாக்கி.. ஆசைகளை அடக்கி........ என்னத்த சொல்ல? எல்லா பிள்ளைகளையும் ஒரே அச்சில் வார்த்த பொம்மைகள் போல் செய்ய முயற்ச்சிக்கின்றனர்.
ஒவ்வொரு பிள்ளைக்கும் மூளை செயல்படும் அளவு வித்யாசப்படும். அவர்கள் எண்ணங்கள், செயல்பாடுகள் எல்லாமே வித்யாசமாக இருக்கும். ஒவ்வொரு பிள்ளையும் தனித்தன்மையுடன் இருக்கும். அவர்களுக்கு விருப்பம் உள்ள துறையில் அவர்கள் செல்ல அனுமதிக்க வேண்டும். விருப்பமில்லா துறையில் அவர்களை ஓரளவுக்கு தான் தள்ள முடியும். அளவுக்கு மீறி தள்ளினால் கீழே விழுந்திடுவாங்க. அப்புறம் அவர்களால் வாழ்க்கையில் எழும்பவே முடியாது.
பெற்றோர்களுக்கு, கால் போன போக்கிலே பிள்ளைகளை அனுப்பாமல் பார்த்து வளர்ப்பதற்கும், அவர்கள் ஆசைகளை, திறமைகளை புரிந்து கொண்டு வளர்ப்பதற்கும் வித்தியாசம் தெரிந்திருக்க வேண்டும்.
உலகம் மாறிவிட்டது.. நீங்கள் மட்டும் இன்னும் மாறாமல் ஏன் இருக்கிறீர்கள்? எல்லா துறைகளிலும் முன்னேற வழி இருக்கின்றன. ஒரு Engineer மட்டும் தான் வாழ்க்கையில் வெற்றி பெற முடியும் என்ற நிலை இல்லை.
இப்படி பொறியியல் மோகம் பிடுத்து தள்ளி விட்ட குழந்தைகளின் கதி என்ன...??
அடுத்த பாகத்தில் காணலாம்...
இந்த பதிவை எனக்காக எடிட் செய்தவர் - அன்புத்தோழி சித்ரா..